Thursday, August 30, 2012

பட்டம் பெறும் உலமாக்கள், இனி என்ன செய்யலாம்? - (1)

பட்டம் பெறும் உலமாக்கள்,
இனி என்ன செய்யலாம்? - (1)

(இக்கட்டுரை அல்-இஸ்லாம்,  ஜனவரி, 2001 இதழில் வெளிவந்தது)

ஏழாண்டுகள் தொடர்நது கல்வி கற்று நீங்கள் இப்போது ஆலிம் என்னும் பட்டம் பெற்றிருக்கிறீர்கள்!

இப்பட்டம் உங்களை ...
- நபிமார்களுக்கு வாரிசாகவும்
- மக்களுக்கு வழிகாட்டிகளாகவும்
- இறையச்சமுள்ளோருக்கு இமாம்களாகவும்
- சமுதாயத்திற்கு ஊழியர்களாகவும்

ஆக்கியிருக்கும் பட்டமாகும்!

இப்பட்டத்தின் மதிப்பு, நீங்கள் மேற்கண்ட நான்கு விதத்திலும் சிறப்பாகச் செயல்படுவதில்தான் உள்ளது!

ஆனால், இதுவரை நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு ஓர் அடிப்படைக் கல்வி மட்டுமே! இதற்கும் மேல் உயர்கல்விகள் பல உள்ளன! உங்கள் வாழ்க்கை முழுதும் கற்கவேண்டிய எத்தனையோ விஷயங்கள் உள்ளன!




மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ வேண்டியவர்கள் அவர்களை விடத் தகுதிகளிலும் முன்னேறி இருக்க வேண்டும். 

உங்கள் தகுதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கான சில வழிமுறைகள் இங்குத் தரப்படுகின்றன:


  1. மார்க்கக் கல்வியிலேயே உயர்கல்வியைக் கற்றுக் கொள்வது.
  2. உலகக் கல்வியில் தற்காலத்திற்கு அவசியமாக இருக்கும் கல்விகளைக் கற்றுக் கொள்வது.
  3. மேற்கண்ட இரண்டுக்கும் வாய்பில்லை எனில், மார்க்கத்தின் வழிமுறைக்கு ஏற்ற ஒரு தொழிலில் ஈடுபடுவது
 
  1. மார்க்கக் கல்வியில் உயர்கல்வி
ஆலிம் கல்விக்குப் பின்னர் உள்ள ஃபாளில், தவ்ரா மற்றும் சிறப்பு (ஃகுஸூஸிய்யாத்) வகுப்புகளில் சேரலாம். நம் நாட்டில் பல மார்க்கக் கல்வி நிறுவனங்களில் இவ்வகை உயர்கல்விகள் அளிக்கப் பட்டு வருகின்றன. அங்குத் தொடர்பு கொண்டு அதற்கான விவரங்களைச் சேகரித்து, அவற்றில் சேர வேண்டும். 

  1. உலகக் கல்விகள்
ஒரு கல்வித் தகுதியைப் பெற்றுள்ளவர்கள், அதற்கு அடுத்த கல்வித் தகுதியைப் பெறுவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.  உதாரணமாக, ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளவர்கள், எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும், எட்டாம் வகுப்பு படித்துள்ளவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெறவும், பத்தாம் வகுப்பு படித்துள்ளவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

சில யோசனைகள்
  1. 8,10,12 ஆம் வகுப்புகளுக்குரிய தேர்வுகளை எழுத முயற்சிக்கலாம்.
  2. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்திருந்தால் பல்கலைக் கழங்களில் அஃப்ளலுல் உலமா மற்றும் பிற பயிற்சிகளில் சேரலாம்.
  3. ஆங்கிலம், தமிழ், மற்றும் அரபி டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நேரத்தில் ஒவ்வொரு மொழியாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  4. கம்ப்யூட்டர் கல்வியில் சேரலாம். கம்ப்யூட்டரில் விண்டோஸ், எம்-எஸ் வோர்டு, எக்ஸல், பவர்பாய்ன்ட் இன்னும் பிற கம்ப்யூட்டர் பயிற்சிகளைக் கற்கலாம்.
  5. இதில் ஆங்கிலம்-அரபி இரண்டையும் கற்றுக் கொள்வது மிகமிகச் சிறந்தது.  அரபுநாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. உள் நாட்டிலும் வாய்ப்புகள் உள்ளன.
  6. ஆங்கிலம் பேச, எழுதக் கற்றுத் தரும் பயிற்சிகளில் சேரலாம்.
  7. தனியாக அல்லது உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம்.
இவ்வழிகளில் பட்டம் பெறும் உலமாக்கள் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ளலாம். 

எப்படி இருப்பினும், அவர்கள்...
நபிமார்களின் வாரிசு !
மக்களுக்கு வழிகாட்டிகள் !
இறையச்சமுள்றோருக்கு இமாம்கள் !
சமுதாயத்திற்கு உழியர்கள் !

எனச் செயல்படுவதையே தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும!

இளம் உலமாக்கள் வளர்ந்து சிறக்க, வாழ்த்துக்கள்!

அஃப்ளலுல் உலமா
அஹ்மது ஆரிஃப், எம்., காம்., எம்.ஃபில்.,
இயக்குநர்,
அரபிக் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ்.



No comments:

Post a Comment